Tuesday, August 24, 2010

DMK MPs Meet In Anna Arivalayam

தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத் தீர்மானங்கள்

August 24, 2010 15:55:08
தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வரும் தி.மு.க., தலைவருமான கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும்,

தி.மு.க., எம்.பி.,க்கள் மு.க.அழகிரி, ராசா, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆதிசங்கர், ஜெயத்துரை, விஜயன் ஜின்னா, ஹெலன் டேவிட், அப்துல் ரகுமான், வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒன்றை மத்திய அரசு மேற்கொள்ள முடிவெடுத்து, வரைவு சட்ட முன்வடிவு ஒன்றையும் தயாரித்து மாநில அரசுகளுக்கு அனுப்பியது. முதல்- அமைச்சர் கருணாநிதி அந்த சட்ட முன்வடிவு குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பி, அது மாநில அரசுகளின் வரி விதித்திடும் உரிமையைப் பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்வதாகவும், கூட்டாட்சித் தத்துவதற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து, விரிவாக கடிதங்கள் அனுப்பியதோடு, மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் தமிழகத்தின் நிதி அமைச்சர் அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு அவர்களும் மாநில அரசின் அணுகுமுறை பற்றிய விளக்கங்களை வழங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு சட்ட முன் வடிவை திருத்தி அமைத்தது, திருத்தி அமைக்கப்பட்ட சட்ட முன்வடிவும், பிழையான செயல்திட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமில்லாத கால அட்டவணையும் கொண்டதாக அமைந்திருந்தது.

புதிய சட்டத்திருத்தத்தினால், சராசரி மனிதன் பயன்படுத்தும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி உயரும் என்றும், ஆடம்பரப் பொருள்களின் மீதான வரி குறையும் என்றும், குறைந்த வருவாய் உடைய மக்கள் தொகை நிறைந்துள்ள நமது நாட்டில் புதிய வரிவிதிப்பு முறை பிற்போக்கானது எனக்கருதப்படும் என்றும், பல்வேறு முனைகளிலும் வேறுபாடு நிறைந்த தன்மைகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய நாடாகத் திகழும் இந்தியத் திருநாட்டில் ஒரே மாதிரியான தேசிய வரியை விதிப்பது என்பது பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு வழி வகுக்கும் என்றும், சிறுகுறு தொழில் முனைவோர்க்கு பாதிப்பை உருவாக்கும் என்றும், மதிப்புக் கூட்டு வரிக்கு மாறிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக, ஜனநாயக ரீதியிலான விரிவான கலந்தாலோசனையும், அதில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது என்றும், மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்குதல் என்பது கானல் நீராகவே முடிகிறது என்றும் கருத்துக்கள் தெரிவித்து முதல் -அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியிருந்தார்.

இவற்றிற்கு பிறகு, ஒரு மனதான ஒப்புதலின்றி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வது சாத்தியமாகாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் அறிவித்திருப்பது நமக்கு மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை கழக எம்.பி.க்களின் இக்கூட்டம் மனமுவந்து வரவேற்று, நன்றி செலுத்துவதோடு இறுதியாகவும், உறுதியாகவும் கல்வி, வரி விதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது சம்பந்தமான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திய மருத்துவக் குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு 2011-2012ஆம் ஆண்டு முதல் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

இதனை அறிந்ததும் முதல் -அமைச்சர் கருணாநிதி கிராமப்புற மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை 2007-2008-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும், அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாளதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர் என்றும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்றும், தமிழக அரசு நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும், சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்து தெரிவித்து, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து நல்ல முடிவு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டு, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோருக்கு 15-8-2010 அன்று கடிதம் எழுதினார்.

இதனையடுத்து, மருத்துவப்படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் விரிவான விவாதம் நடத்த இருப்ப தாகவும், மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதல்- அமைச்சர் கருணாநிதி விடுத்த கோரிக்கையினையொட்டி, உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்து, தமிழகத்தில் சமூக நீதிக்குச் சேதம் ஏற்படாமல் தடுத்த மத்திய அரசுக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, அகில இந்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு என்பதை நிரந்தரமாக ரத்து செய்து அறிவித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்குச் சென்று வசிக்கின்ற வாழ்வாதாரங்களை இன்னமும் சிங்கள அரசு செய்து தராமல் காலம் கடத்தி வருகிறது. இடம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கின்ற அதே நேரத்தில், இந்திய அரசின் கருத்துக்கு மாறாக இலங்கை அரசு இடம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினையில் இன்னும் மந்த நிலையில் செயல்படுவதை இந்தக் கூட்டம் சுட்டிக்காட்டுவதோடு - உடன் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உரிய வழி காண வேண்டுமென்று இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Source:sivajitv.com

Monday, August 23, 2010

Who accept the leadership of dmdk with only alliance

மதுராந்தகம் : தே.மு.தி.க., கட்சியின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்படும் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச திருமண மண்டபம் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலர் ரமேஷ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

திருமண மண்டபத்தை திறந்து வைத்து, ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைத்து விஜயகாந்த் பேசியதாவது:மாமண்டூர் மக்களுக்காக திருமண மண்டபம் கட்டியுள்ளேன். இதை இடிக்க தாசில்தார் வந்தார். அமைச்சரும், கலெக்டரும் மண்டபத்தை இடிக்க கூறுகின்றனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். மண்டபத்தை மக்களுக்கே அர்ப்பணிக்கிறேன். என் சொந்த செலவில் ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர், ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினேன். அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்துள்ளேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1998ம் ஆண்டு தொடங்கியிருந்தால் செலவு குறைவாக இருக்கும். இப்போது 1,800 கோடி செலவாகும். தமிழகத்தில் 60 சதவீதம் பேர் தான் விவசாயம் செய்கின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு மானியமாகவும் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது. மின்சாரமே சரியாக கிடைப்பதில்லை. நீர்மட்டமும் 500 அடிக்கு கீழே உள்ளது.

இலவச "டிவி', காஸ் கொடுத்து ஓட்டுகளை பெற உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்; என்னை ஆதரியுங்கள்; மக்களுக்காக நல்லதை செய்வேன். கருணாநிதியால் ஒன்றும் செய்யமுடியாது. ஜெயலலிதா வழக்கிற்கு மட்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமென சொல்கிறார்கள். ஆனால் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மட்டும் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மிடாஸ் மதுபான கம்பெனியில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏராளமான மதுபான கம்பெனிகளை தொடங்கி ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். தே.மு.தி.க., தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். கோயம்புத்தூரில் டிசம்பரில் கட்சி மாநாடு நடத்தப்படும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.அறக்கட்டளை தலைவர் பிரேமலதா, அறங்காவலர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source: தினமலர் ஆகஸ்ட் 22,2010,23:30 IST

Saturday, August 21, 2010

Tamilnadu Election PollSurvey

No party has come for alliance with us, sys TN BJP chief


கூட்டணிக்காக யாரும் எங்களை நாடவில்லை: பாஜக

கூட்டணிக்காக பாஜகவை நோக்கி யாரும் வரவும் இல்லை, யாரையும் நாங்கள் அணுகவும் இல்லை என்று அக் கட்சியி்ன் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சட்டசபை [^] தேர்தலில் இளைஞர்கள், மாணவர்கள் [^], மக்கள் சக்தியை கொண்டு சொந்த பலத்தில் பாஜக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும்.

கூட்டணிக்காக பாஜகவை நோக்கி யாரும் வரவும் இல்லை. யாரையும் நாங்கள் அணுகவும் இல்லை.

வரும் நவம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி வரை தமிழகம் [^] முழுவதும் யாத்திரை நடத்தி, பின்னர் சென்னையில் பல லட்சம் பேரை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதில்லை. சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. இதனால் 85 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி கல்வி உதவித் தொகை கோரி போராட்டம் [^] நடத்துவோம் என்றார்.

Friday, August 20, 2010

dmdk vijayakanth committee assembly polls


தேர்தலுக்குத் தயாராகிறது-கூட்டணி உள்ளிட்டவை குறித்துப் பேச உயர்மட்டக் குழு அமைப்புதேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் உயர் மட்ட நிர்வாகிகள் குழுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயர்மட்ட குழுவில் நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்-அவைத்தலைவர், எல்.கே.சுதீஷ்-மாநில இளைஞர் அணி செயலாளர், எஸ்.தங்கபாண்டியன்- துறைமுகம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மைக்கேல் ராயப்பன்-ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், பாலன்-மதுரை ஆகியோர் பணியாற்றுவார்கள்.

பி.கிருஷ்ணமூர்த்தி உயர்மட்ட குழுவில் நியமிக்கப்படுவதால், தேர்தல் பணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கா.ஜெகவீரபாண்டியன் தேர்தல் பணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். சி.ஆர்.பாஸ்கரன், புலவர் கதிரவன் ஆகியோர் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தக் கூட்டணியில் தேமுதிக சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசி முடிவெடுத்து விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. விஜயகாந்த்துடன் சேர எங்களுக்குத் தயக்கம் இல்லை என்று டாக்டர் ராமதாஸும் கூறியுள்ளார். எனவே தேமுதிகவின் கூட்டணி வியூகம் என்ன என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.

இந்த நிலையில் உயர் மட்டக் குழுவை அவர் அமைத்திருப்பது மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Source:-Thatstamil.oneindia.in சனிக்கிழமை, ஆகஸ்ட் 21, 2010, 9:14[IST]

Why I have trouble with DMK explains EVKS

தமிழகத்தில் கூட்டணி மாறும்: இளங்கோவன்
எனக்கும் திமுகவுக்கும் இடையே எதற்காக பிரச்சனை வந்தது?, ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்திப் பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன், அதனால் தான்.. என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்க கோரி தமிழக காங்கிரசின் நட்பகம் அமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இந்த உண்ணாவிரதத்துக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி.டி.மெய்யப்பன் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய இளங்கோவன் , ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட உண்ணாவிரதம் இருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது ஒரு உருப்படியான காரியம்.

நியாயமாக சொன்னால், பொறுப்பில் உள்ளவர்கள் தான் இதை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் 'ஜவ்வு மிட்டாய்' கொடுப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார்கள்.

ராஜீவ் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட கேட்பது அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க அல்ல. இதில் ஆளும் கட்சி அவரது பெயரை சூட்டி பெருமை தேடி கொள்ள வேண்டும்.

ராஜீவ் பெயரை சூட்டுவதில் என்ன நஷ்டம் ஏற்படப் போகிறது?. இது போன்று நான் பேசினால் என்னைப் பற்றி கோள் சொல்ல சிலர் டெல்லிக்கு செல்கிறார்கள். சிலரை திருத்தலாம், சிலரை திருத்தவே முடியாது.

எனக்கும், ஆளும் கட்சியினருக்கும் எதற்காக பிரச்சனை வந்தது?. ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்தி பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன்.

இதேபோல் மத்திய அரசு திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படுவதை எங்கள் திட்டம் என்று கூறினேன். நான் என்றும் காங்கிரஸ்காரன். மத்திய அரசின் கொள்கை திட்டங்களை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

தமிழகத்தில் கூட்டணி மாறும், இன்று மாலையே கூட மாறும் என்றார்.

Source:-thatstamil.oneindia.in வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, 15:55[IST]

Thursday, August 19, 2010

ADMK front will win in TN assembly polls Vaiko


எத்தனை கோடி செலவு செய்தாலும் திமுக தோற்பது உறுதி-வைகோ
திமுக எத்தனை ஆயிரம் கோடியைச் செல்வு செய்தாலும் வெல்லப் போவது அதிமுக கூட்டணிதான் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

நாகர்கோவில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தி.மு.க., அரசு மீது எல்லா தரப்பு மக்களுக்கும் வெறுப்பு வளர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்கள் [^] வெறுப்படைந்து போய் உள்ளனர். இதன் வெளிப்பாடாகதான் கோவை மற்றும் திருச்சி [^] அ.தி.மு.க., போராட்டத்தில் மக்கள் குவிந்தனர்.

முல்லைப்பெரியாறு பிரச்னையில் தி.மு.க.வின் நிலைப்பாடுதான் தமிழ்நாட்டுக்குரிய நியாயத்தை கிடைக்க விடாமல் செய்கிறது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அணி வலுவாக உள்ளது. இந்த அணியில் மேலும் கட்சிகள் சேருமா? என்பது போன்ற யூகங்களுக்கு ஜெயலலிதாதான் பதிலளிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் அ.தி.மு.க., அணி வெற்றி பெறும் என்றார் வைகோ

Source:- Times of India வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, 10:57[IST]

ADMK allience will win the election


அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
சென்னை : ""வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ள ஓட்டுக்களில், குறைந்த சதவீதத்தில் தான் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்துள்ளது. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாம் போட்டியிட முடியும். கடந்த சட்டசபை தேர்தலில் சீமா பஷீர், மணிமாறன், நடராஜன், பூமிநாதன் போன்றவர்கள் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். அவர்கள் வெற்றி பெற்று, கூடுதலாக சில எம்.எல்.ஏ.,க்கள் நமக்கு கிடைத்திருந்தால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் எளிதாக கிடைத்திருக்கும்.

மக்கள் மனதில் ம.தி.மு.க.,வின் அங்கீகாரம் நீடிக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக என் பிரசாரம் வலிமையாக இருக்கும். தி.மு.க., குடும்பச் சொத்துக்களின் முழுவிவரமும், ஆதாரத்துடன் கூடிய பல புதிய தகவல்கள் என் கைக்கு கிடைத்துள்ளது. இப்போது நான் வெளியிட்டு பேசுவதை விட, தேர்தல் நேரத்தில் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்வேன்.

மக்கள் பிரச்னைகளில் தி.மு.க., கவனம் செலுத்தவில்லை. தினமும் ஆடம்பர பகட்டு விழாக்களை நடத்தி, மக்களை எரிச்சல் அடையச் செய்து வருகிறது. கருத்து உரிமைக்கு பலத்த அச்சுறுத்தலை தி.மு.க., அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி, முதல்வர் குடும்ப உறுப்பினர்களுக்கு விளம்பர வெளிச்சம் தேடும் மாநாடாக கோவை செம்மொழி மாநாடு அமைந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விட்டது. ம.தி.மு.க.,வினருக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் சட்டசபை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு வைகோ பேசினார்.

Source:- தினமலர் ஆகஸ்ட் 18,2010,22:37 IST