தமிழகத்தில் கூட்டணி மாறும்: இளங்கோவன்
எனக்கும் திமுகவுக்கும் இடையே எதற்காக பிரச்சனை வந்தது?, ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்திப் பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன், அதனால் தான்.. என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்.
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்க கோரி தமிழக காங்கிரசின் நட்பகம் அமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரதத்துக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி.டி.மெய்யப்பன் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய இளங்கோவன் , ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட உண்ணாவிரதம் இருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது ஒரு உருப்படியான காரியம்.
நியாயமாக சொன்னால், பொறுப்பில் உள்ளவர்கள் தான் இதை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் 'ஜவ்வு மிட்டாய்' கொடுப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார்கள்.
ராஜீவ் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட கேட்பது அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க அல்ல. இதில் ஆளும் கட்சி அவரது பெயரை சூட்டி பெருமை தேடி கொள்ள வேண்டும்.
ராஜீவ் பெயரை சூட்டுவதில் என்ன நஷ்டம் ஏற்படப் போகிறது?. இது போன்று நான் பேசினால் என்னைப் பற்றி கோள் சொல்ல சிலர் டெல்லிக்கு செல்கிறார்கள். சிலரை திருத்தலாம், சிலரை திருத்தவே முடியாது.
எனக்கும், ஆளும் கட்சியினருக்கும் எதற்காக பிரச்சனை வந்தது?. ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்தி பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன்.
இதேபோல் மத்திய அரசு திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படுவதை எங்கள் திட்டம் என்று கூறினேன். நான் என்றும் காங்கிரஸ்காரன். மத்திய அரசின் கொள்கை திட்டங்களை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
தமிழகத்தில் கூட்டணி மாறும், இன்று மாலையே கூட மாறும் என்றார்.
Source:-thatstamil.oneindia.in வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, 15:55[IST]
No comments:
Post a Comment